சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்றால், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சோலோ குவேனிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்றாவது வீரர் ஆனார் சோலோ குவேனி. முன்னதாக இத்தொற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சஃபார் சர்ஃப்ராஸ், ஸ்காட்லாந்தின் மஜித் ஹக் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது குறித்து சோலோ குவேனி தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்தாண்டு ஜிபிஎஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நான் அந்த நோய்க்கு எதிராக 10 மாதங்களாக சிகிச்சை பெற்றுவருகிறேன். அந்த நோயிலிருந்து பாதிதான் மீண்டு வந்துள்ளேன்.
எனக்கு காசநோய் ஏற்பட்டதால் எனது கல்லீரலும் சிறுநீரகம உறுப்புகளும் செயல் இழந்தன. இன்று எனக்கு கரோனா வைரஸ் இருப்பதும் ஆய்வின் முடிவில் தெரியவந்ததால் எனக்கு மட்டும் ஏன் இப்படிநடக்கிறது என்று புரியவில்லை" என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2019இல் ஸ்காட்லாந்தில் கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் போது அவருக்கு ஜிபிஎஸ் என்கிற அரியவகை நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அவரது மருத்துவ செலவுக்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் 50 ஆயிரம் ராண்ட் நிதி வழங்கினர்.
26 வயதான சோலோ குவேனி 2012ஆம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்து எட்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், ஈஸ்டர்ன் பிராவின்ஸ் கிளப் அணிக்காக 36 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதையும் படிங்க:பார்த்தீவை முகத்தில் குத்துவேன் என மிரட்டிய ஹெய்டன்...!