தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 8, 2019, 2:06 PM IST

ETV Bharat / sports

சேவாக் அன்று அவுட்டாகாமல் இருந்திருந்தால்..!

இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது வீரராக இரட்டை சதம் விளாசிய நாள் இன்று.

sehwag 219, சேவாக்
sehwag

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரர் இரட்டை சதம் அடிப்பாரா என்ற கேள்வி நீண்ட காலமாக நிலவிவந்தது. ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி, பாகிஸ்தானின் சயீத் அன்வர் ஆகியோர் 194 ரன்களை அடித்து இரட்டை சத இலக்கை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு அளித்ததே இதற்கு முக்கிய காரணம். இருப்பினும் அவர்களால் அந்த இலக்கை எட்ட முடியாததால் யார் அந்த இரட்டை சத சாதனையை நிகழ்த்த போகிறார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதுபோன்ற சூழலில், சாதனைகளின் நாயகனான சச்சின் டெண்டுல்கர், கடந்த 2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி தனது சாதனை புத்தகத்தில் மட்டுமல்லாது உலக கிரிக்கெட்டின் சாதனை புத்தகத்திலும் ஒரு புதிய பட்டியலை உருவாக்க காரணமாக அமைந்தார்.

சச்சின்

அதன்பின் அவரது சாதனையை யாரால் முறியடிக்க முடியும் என்ற கேள்வி எழுந்த நிலையில், 2011 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய முதல் போட்டியில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக்கிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அப்போட்டியில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவாக் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48ஆவது ஓவரிலேயே 175 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார் சேவாக். அவர் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அன்றே அவர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்திருப்பார்.

175 ரன்கள் விளாசிய போட்டியில் சேவாக்

ஆனால், சேவாக் போன்ற அன் ஆர்த்தடெக்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு இது ஒரு பெரிய விஷயமல்ல. அதேபோன்று சேவாக்கிற்கு டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. இம்முறை வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட சேவாக் வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை சிதறடித்து இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினார்.

அவர் அப்போட்டியில் சந்தித்த முதல் பந்தில் பவுண்டரி அடித்த சேவாக், அதன்பின் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகள் அடித்து ரன்களை உயர்த்தினார். அவர் கம்பீர் உடன் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்து அதகளப்படுத்தினார். அதன்பின்பும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் அனைவரையும் சோதனை செய்த விரேந்திர சேவாக், மைதானத்தில் நங்கூரம் பாய்ச்சியதுபோல் நின்று கொண்டு பின்னிப் பெடலெடுத்தார்.

சேவாக்

அன்று சேவாக்கின் ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றுமொரு சாதனை நிகழ இருப்பதை உணர்ந்ததால் உற்சாக மிகுதியில் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். கடந்தமுறை ஏமாற்றியதுபோல் இம்முறை அவர்களை ஏமாற்றக் கூடாது என்று எண்ணிய சேவாக், ரஸ்ஸல் 44ஆவது ஓவரில் பவுண்டரி அடித்து இரட்டை சதம் என்னும் மைல்கல்லை எட்டினர்.

சச்சினுக்கு அடுத்தபடியாக இந்த சாதனையைப் படைத்தாலும் சச்சினை விட அதிகமான ரன்களை எடுத்து புதிய சாதனைப் படைத்தார் சேவாக். இதன்மூலம் டாக்காவில் தவறவிட்டதை இந்தூரில் பிடித்தார் சேவாக்.

இரட்டைசதம் அடித்த பின்பும் அதிரடியை தொடர்ந்த சேவாக் 219 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்று ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் ஆட்டமிழந்த சேவாக், இறுதிவரை விளையாடியிருந்தால் நிச்சயம் அப்போதே அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 250 ரன்களை எட்டியிருந்திருப்பார் என்பதே உண்மை.

சேவாக்கிற்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் பல வீரர்கள் இரட்டை சதம் விளாசுவதை சாதரணமாக செய்துமுடித்தனர். அதில் இந்திய வீரர் ரோஹித் சர்மா மூன்று முறை இரட்டை சதம் விளாசியதோடு, இலங்கை அணிக்கு எதிராக 264 ரன்கள் குவித்து பிரமாண்ட சாதனையுடன் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

சேவாக் படைத்த இந்த சாதனையை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details