இந்திய டெஸ்ட் அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவின் மகளும், இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு(88), உடலநலக் குறைவு காரணமாக நேற்று(ஏப்ரல்.4) மதியம் உயிரிழந்தார். இவர் கடந்த சில காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தூரில் உள்ள அரசு கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சந்திரா, ஹோல்கர் கல்லூரியில் படிக்கும்போது கிரிக்கெட் விளையாடி உள்ளார். காலப்போக்கில், கிரிக்கெட் மீதான ஆர்வத்தில் வர்ணனையாளராக வலம்வர தொடங்கியுள்ளார். குறிப்பாக, சர்வதேச போட்டிக்கான இந்தியாவின் முதல் பெண் வர்ணனையாளர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. மேலும், கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர்.