ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் ஏற்கெனவே முடிந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் ஆஸ்திரேலியாவும், மற்றொன்றில் இந்தியாவும் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜன. 07) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்குத் தொடங்கும் இப்போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ளது.
ரோஹித், சைனி அணியில்:
ஆஸ்திரேலியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் மயாங்க் அகர்வாலுக்குப் பதிலாக அதிரடி வீரர் ரோஹித் சர்மா அணியில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகிய உமேஷ் யாதவிற்குப் பதிலாக அறிமுக வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மாவின் அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் கைக்கொடுக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான தொடக்க வீரர் சுப்மன் கில், தனது சிறப்பான ஆட்டத்தால் அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
நடுவரிசையில் புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷப் பந்த் என நட்சத்திர வீரர்கள் உள்ளது இந்திய அணியின் பேட்டிங்கை வலிமைப்படுத்தியுள்ளது. சுழற்பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா இணை தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துவருகின்றன.
வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ரா மட்டுமே அனுபவம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து முகமது சிராஜ் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். இறுதியாக அறிமுக வீரர் நவ்தீப் சைனி, நாளைய போட்டியில் பும்ராவுடன் இணைந்து தொடக்க ஓவர்களை வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.