ஹைதராபாத்தைப் பூர்விகமாகக் கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், 2021ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடுவதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று (டிச. 30) ராஜஸ்தானில் உள்ள ரணதம்போர் தேசிய பூங்காவிற்கு தனது குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, சூர்வால் என்ற இடத்தில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், காரின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து சூர்வால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் அசாருதீன் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதையடுத்து அசாருதீன் நிலை குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தனர்.
இந்நிலையின் தான் நலமாக இருப்பதாக முகமது அசாருதீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “இன்று எனக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது, அல்லாவின் அருளால் நான் நன்றாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். நீங்கள் என் மீது வைத்துள்ள அனைத்து அக்கறைக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:INDvsAUS: இந்திய அணியுடன் இணைந்தார் ஹிட்மேன்!