நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், 2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான (மார்ச் 23 - ஏப்ரல் 6) லீக் போட்டிகளின் அட்டவணைகள் மட்டுமே வெளியானது.
இந்நிலையில், மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளுக்கான அட்டவணையும் தற்போது ஐபிஎல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மார்ச் 23 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை லீக் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
மேலும், பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிகளின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேற்கூறியதைப் போலவே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், ஏப்ரல் 6ஆம் தேதிக்கு பிறகு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணைகள் மாற்றப்படலாம் என ஐபிஎல் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 23 ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது.