உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஒரு டி 20, ஐந்து ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. முதலில் ஆடிய டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவதுஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் நேற்று பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக் அதிரடியாக ஆடி 151 (131 பந்துகள், 16 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) அடித்ததால் அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்களை குவித்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் தாறுமாறாக ரன்களை விளாசத் தொடங்கினர். அந்த அணி 17.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்திருந்தபோது ஜேசன் ராய் 76 (55 பந்துகள், 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார். அதற்கு பின்பும் அதிரடியாக ஆடிய பெய்ர்ஸ்டோ 93 பந்துகளில் 128 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.