வரும் 10ஆம் தேதிமுதல் மாநிலங்களுக்கு இடையேயான சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் மாநிலங்கள் தங்களது அணிகளை அறிவித்துவருகின்றன.
அந்த வரிசையில் மும்பை கிரிக்கெட் சங்கம், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 20 பேர் கொண்ட அணியை கடந்த மாதம் அறிவித்திருந்தது. இந்நிலையில், அந்த அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், கிருத்திக் ஹனகவாடி ஆகியோரையும் சேர்த்து 22 பேர் கொண்ட அணியாக இத்தொடரில் பங்கேற்கவுள்ளது.
இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் கூறுகையில், “முன்னதாக பிசிசிஐ 20 வீரர்களைத் தேர்வுசெய்யுமாறு கோரியிருந்தது. பின்னர் 22 வீரர்களை அணியில் தேர்வுசெய்யலாம் என்று பிசிசிஐ கூறியதைத் தொடர்ந்து, ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கர், வேகப்பந்து வீச்சாளர் கிருத்திக் ஹனகவாடி ஆகியோர் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளது.
இதன்மூலம் மும்பை சீனியர் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் முதல் முறையாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக இலங்கை அணிக்கெதிரான தொடரின்போது இந்திய அணியின் வலைப்பந்து வீச்சாளராக அர்ஜுன் டெண்டுல்கர் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘கங்குலியின் உடல்நிலை சீராகவுள்ளது’ - மருத்துவமனை அறிக்கை