தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நாங்க பாகிஸ்தானுக்குப் போக மாட்டோம்... இலங்கை வீரர்கள் திட்டவட்டம்

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் பங்கேற்கபோவதில்லை என மலிங்கா, மேத்யூஸ் உள்ளிட்ட 10 இலங்கை வீரர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

By

Published : Sep 10, 2019, 7:13 PM IST

Malinga

இலங்கை அணி தனது சொந்த மண்ணில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்தை சந்தித்தது. இதில், 1-2 என்ற கணக்கில் அந்த அணி தோல்வியடைந்திருந்தாலும் மூன்றாவது போட்டியில் கேப்டன் மலிங்கா தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து முறை ஹாட்ரிக் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இந்த தொடரையடுத்து, இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கராச்சியில் செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இந்தத் தொடரில் தாங்கள் பங்கேற்கபோவதில்லை என மலிங்கா, மேத்யூஸ் உள்ளிட்ட 10 இலங்கை வீரர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

ஏனெனில், 2009 இல் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் இலங்கை வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின், 2017இல் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு டி20 போட்டியில் விளையாடியது. ஆனாலும், இம்முறை ஆறு போட்டிகள் நடைபெறவுள்ளதால் பாதுகாப்பை கருத்தில்கொண்டு மலிங்கா உள்ளிட்ட 10 வீரர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Malinga

இதனால், இந்தத் தொடரில் பங்கேற்கவிருக்கும் இலங்கை அணியின் வீரர்கள் பட்டியலை இன்னும் அந்த அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை. 2009இல் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மற்ற அணிகள் மறுத்ததால், அங்கு நடைபெற வேண்டிய கிரிக்கெட் தொடர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இருப்பினும், தங்களது நாட்டில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் அணி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன் அடிப்படையில், இலங்கை (ஒரு டி20), ஜிம்பாப்வே (மூன்று டி20) ஆகிய அணிகள் பாகிஸ்தானில் பங்கேற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்புத் தெரிவித்த இலங்கை வீரர்கள் விவரம் பின்வருமாறு: மலிங்கா, மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், சுரங்கா லக்மல், திமுத் கருணரத்னே, திசாரா பெரேரா, அகிலா தனஞ்ஜெயா, தனஞ்ஜெயா டி சில்வா, குசால் பெரேரா, நிரோஷன் டிக்வேலா

ABOUT THE AUTHOR

...view details