நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் க/பெ.ரணசிங்கம். இத்திரைப்படத்தின் கதை தன்னுடையது என புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள தீர்த்தான்விடுதி கிராமத்தை சேர்ந்த மிடறு முருகதாஸ்(46) புகார் தெரிவித்துள்ளார். சிறுவயதிலிருந்தே கவிதை ஆகியவற்றில் நாட்டம் கொண்டதால் அப்பகுதியில் கவிஞர் என்று அழைக்கப்படக் கூடியவர் இதுவரை மிடறு என்ற கவிதைத் தொகுப்பையும், தூக்குக் கூடை என்ற சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் க/பெ.ரணசிங்கம் திரைப்படம் தன்னுடையது என்று கூறிய மிடறு முருகதாஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தொலைபேசியில் மிடறு முருகதாஸை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் கூறியதாவது, ”என்னுடைய ’தவிப்பு’ சிறுகதை க/பெ.ரணசிங்கம் என்ற திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. எனது கதையில் வரும் ராஜசேகரனுக்கும், ரணசிங்கத்துக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. 2017ஆம் ஆண்டு கதை சொல்லி மாத இதழில் பிரசுரமாகியும், 2018ஆம் ஆண்டு வெளியான ’தூக்கு கூடை’ என்ற எனது சிறுகதை தொகுப்பில் 8ஆவது கதையாகவும் வருவதுதான் ’தவிப்பு’ சிறுகதை.
சாதாரண ஒரு ஏழை குடும்பத்தில் வறுமையில் வாடும் ராஜசேகர் வெளிநாட்டிற்கு பிழைப்புதேடி செல்கிறார் . அவர் வேலைபார்க்கும் இடத்தில் இயந்திர கோளாறால் ரோப்பு அறுந்து விழுந்து இறந்துவிடுகிறார். அந்த உடலை அங்கே அடக்கம் செய்ய முயற்சி நடக்கிறது. ஆனால் என் கணவரை நான் பார்த்தே ஆகவேண்டும் என்று மனைவி பிடிவாதமாக இருக்கிறார். அதற்காக அவரின் உறவினர்கள், ஊராட்சிமன்ற தலைவர் , அதிகாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் படுகின்ற அவஸ்தையயைத்தான் எனது சிறுகதையில் சொல்லியிருக்கிறேன். இது ஒரு உண்மை சம்பவம். நான் எழுதிய கதையை மூடி மறைப்பதற்காக இயக்குநர் பல கோணங்களில் சிந்தித்திருக்கிறார். பல சம்பவங்களை சித்தரிக்கின்றார்.