சென்னை: தமிழ்நாடு அரசால் திரையுலகினருக்கு விதிக்கப்பட்டு வரும் கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு இயக்குநர், நடிகர் டி. ராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர், நடிகர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: 'நான் திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து. ஒரு திரைப்படம் பார்க்க ஒரு ரசிகன் 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது, 12 விழுக்காடு ஜிஎஸ்டி. அதைவிடக் கூடுதலாக, தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது, 8 விழுக்காடு கேளிக்கை (எஸ்பிடி) வரி.
மத்திய அரசு போட்டுவிட்டது ஜிஎஸ்டி வரி, பின்பு ஏன் மாநில அரசு போடுகிறது கூடுதல் வரி? பெரும்பாலும் இந்தியாவில் உள்ள எந்த பிற மாநிலங்களிலும் போடவில்லை வரி.
மத்திய அரசு சொல்வது ஒரே நாடு, ஒரே வரி. ஆனால் இந்த தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இரட்டை வரி? இந்தியாவில் தமிழ்நாடு என்ன தனித் தீவா? எங்கள் திரையுலகிற்கு கொடுக்கிறார்களா காவா?
இதே கோடம்பாக்கத்திலிருந்து வந்து தமிழ்நாட்டை ஐந்து முறை ஆண்ட முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு திரையுலகுக்கு கேளிக்கை வரியை செய்தார், ரத்து. அதே போல் கோடம்பாக்கத்திலிருந்து வந்து தமிழ்நாட்டை மூன்று முறை ஆண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கேளிக்கை வரியைச் செய்தார், ரத்து.