நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தார். இவர், தமிழில் 'காற்று வெளியிடை', 'ரிச்சி', 'நேர்கொண்ட பார்வை' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பிசியாக நடித்துவரும் ஷ்ரத்தா தற்போது மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் உருவாகிவரும் ஆராட்டு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ஆராட்டு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் படப்பிடிப்பு முழுவதும் கேரளாவில் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில் ஆராட்டு படத்தில் நடிப்பது குறித்து ஷ்ரத்தா தனது ட்விட்டர் பக்கத்தில், "'ஆராட்டு' படப்பிடிப்பில் இணைந்தேன். ஒட்டுமொத்த குழுவையும் இன்று சந்தித்தேன். மோகன்லால் என்னிடம் சொன்ன முதல் வார்த்தையே, இந்தக் குடும்பத்துக்குள் வரவேற்கிறேன் என்பதே. இதனால் எனது நாள் சிறப்பானதாகிவிட்டது" எனப் பதிவிட்டார்.