கார்ட்டூன் ரசிகர்களிடம் பிரபலமான 'டாம் அண்ட் ஜெர்ரி' 'பாப் பாய்' உள்ளிட்ட கார்ட்டூன்களோடு சேர்ந்தது 'ஸ்கூபி டூ: வேர் ஆர் யூ'. த்ரில்லர் கலந்த காமெடி சீரிஸான ஸ்கூபி டூ தற்போது 'ஸ்கூப்' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
ஸ்கூபி எனும் நாய், அதன் நண்பன் ஷேகியுடன் வெல்மா, டேஃப்னி, ஃப்ரெட் ஆகியோர் இணைந்து சந்தேகத்திற்கிடமான வழக்குகளை சந்திப்பதுதான் ஸ்கூபி டூவின் கதை. தற்போது இதனை அனிமேஷனில் முழுத் திரைப்படமாக வார்னர் ப்ராஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
'ஸ்கூப்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, கார்ட்டூன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த முறை ஸ்கூபி குழுவினர் அவிழ்க்கப்போகும், மர்ம முடிச்சு மிகவும் பயங்கரமானது என வார்னர் ப்ராஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
மே 15 ஆம் தேதி வெளியாக இருந்த, இப்படம் கரோனா அச்சம் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில், இதன் வெளியிட்டு தேதி தள்ளிப்போனது.
கரோனா தொற்று இன்னும் தொடருவதால், இப்படத்தை திரையரங்கில் வெளியிடாமல் இணையத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன் படி மே 15ஆம் தேதி முதல் படத்தை 24 டாலருக்கு வாங்கலாம் அல்லது 19 டாலருக்கு வாடகைக்கு வாங்கலாம் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து வார்னர் பிரதர்ஸ் தலைமை நிர்வாக அலுவலர் ஆன் சர்னாஃப் கூறுகையில், "ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க நாங்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தோம். ஆனால், என்ன செய்வது இப்போது நேரம் சரியாக இல்லை. ஸ்கூபி - டூவைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் ஒன்றாக இருக்கும், இந்த தருணத்தில் நீங்கள் வீட்டில் இருந்து ரசிக்க இந்தத் திரைப்படம் நல்ல உணர்வைத் தரும். இதை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று கூறினார்.