பிரித்விராஜ் நடிப்பில் உருவாகிவரும் ஆடு ஜீவிதம் படப்பிடிப்பினர் ஜோர்டனில் மாட்டிக்கொண்டது குறித்து பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விவரித்துள்ளார்.
மலையாள எழுத்தாளர் பெனியமின் எழுதிய புதினம் 'ஆடு ஜீவிதம்’ (Goat days). மலையாளத்தில் உருவான இந்தப் புதினம், ஆங்கிலம், அரபி, தமிழ், கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்தப் புதினத்தை அடிப்படையாக கொண்டு பிரித்விராஜ் நடிப்பில் இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் ஆடு ஜீவிதம் படம் உருவாகிவருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்டன் நாட்டில் உள்ள பாலைவனப் பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. தற்போது உலகப்பெருந்தொற்றான கரோனா காரணமாக படப்பிடிப்பை நிறுத்திவைக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
படப்பிடிப்பு தற்போது ரத்தானதால் அங்கு சிக்கியுள்ள 58 பேரை இந்தியாவிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு இயக்குநர் பிளெஸ்ஸி கேரள திரைப்படச் சங்கத்திற்கு கோரிக்கைவிடுத்திருந்தார். இந்த நிலையில் பிரித்விராஜ் தனது சமூகவலைதளப்பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில், "எங்கள் குழுவில் ஒரு மருத்துவர் இருக்கிறார். அவர் மூன்று நாள்களுக்கு ஒருமுறை எங்களைப் பரிசோதித்துவருகிறார். மேலும் ஜோர்டன் அரசு நியமித்துள்ள மருத்துவரும் எங்களை அவ்வப்போது பரிசோதித்துவருகிறார்.
தற்போது உலகம் இருக்கும் நிலையில் எங்கள் குழுவின் 58 பேரை மீட்பது என்பது இந்திய அலுவலர்களின் பிரதான கவலையாக இருக்காது என்பதை என்னால் முழுவதும் புரிந்துகொள்ள முடிகிறது; அது சரியும்கூட. எங்களைப் பற்றி அக்கறை உள்ளவர்களுக்கு நடப்பது என்ன என்பதைத் தெரிவிப்பது எங்கள் கடமை என்று நினைத்தோம்.
உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பக் காத்துக்கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு எப்போது சரியான நேரமும் வாய்ப்பும் வருகிறதோ அப்போது நாங்களும் இந்தியா திரும்புவோம் என நம்புகிறேன். அதுவரை நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்றும் நம்புகிறேன். நாம் அனைவரும் இணைந்து, மீண்டும் வாழ்க்கை சகஜமாக மாறும் என்று நம்புவோம்" என்று பதிவிட்டுள்ளார்.