சென்னை:ஆணவக்கொலைக்கு எதிரான கதைக்களத்தைக் கொண்ட ’போலீஸ்காரன் மகள்’ என்ற திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
காவல் துறையில் சிறப்பு என்கவுண்டராக இருக்கும் ஒருவர், காதல் ஜோடிகளைக் கண்டால் விட மாட்டார். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து சித்ரவதை செய்வார். இந்தக் கொடூர காவலரின் மகள் தன்னைவிட தாழ்ந்த வகுப்பைச் சார்ந்த ஒருவனை காதலிக்கவே அதனை அறிந்த அவர், தன் மகள் கண் முன்னே, காதலனை அடித்து சித்ரவதை செய்து துன்புறுத்துகிறார்.
”காதலனுக்கு உயிர் வேண்டுமென்றால் நம்ம சாதியைச் சேர்ந்த ஒருவனை மணம் முடித்துக்கொள்” என்று தன் மகளை மிரட்டவே தன் காதலனின் உயிருக்காக அவள் சம்மதிக்கிறாள். பின் காதலனோ பைத்தியமாகிவிடுகிறான்.
சில நாள்கள் கழித்து இவ்விருவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விடுகிறார். இவ்வாறு சாதி வெறியின் கொடூரத்தால் உயிர் போகும் அவல நிலையை கண் முன்னே நிறுத்தும் கதையாக இந்த ’போலீஸ்காரன் மகள்’ உருவாக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் டிகிரி காலேஜ் எனும் பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் இது. இதை தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர். ஏற்கனவே தமிழில் ஸ்ரீதர் இயக்கி முத்துராமன் நடிப்பில் வெளிவந்த ’போலீஸ்காரன் மகள்’ எனும் தலைப்பையே இப்படத்துக்கு வைத்துள்ளனர்.