கடந்த 2016ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் தொடங்கப்பட்டது. இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றியதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிக்கும் இத்திரைப்படம் பல்வேறு நிதிப் பிரச்சினைகளால் வெளியாகாமல் இருந்தது. கடந்தாண்டு கரோனா தொற்றுப் பிரச்சினையால் படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே போனது.
இதனிடையே செல்வராகவன் நடிகர் தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு விடுத்திருந்த நிலையில் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது.