பிரசாந்த் நீல் இயக்கத்தில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான "கே.ஜி.எஃப்" திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் வெளியானது. சிறந்த ஆக்ஷன் படமாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், வசூலிலும் சாதனை படைத்தது.
இப்படம் சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த விஎஃப்எக்ஸ் (Vfx)ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, "கே.ஜி.எஃப்" இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
கருடன் கொல்லப்பட்டதற்குப் பின்பு நடக்கும் கதையாக இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கருடனின் அண்ணனாக சஞ்சய் தத் நடித்துள்ளார்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், அடுத்த மாதம் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் "கே.ஜி.எஃப்-2" வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், இன்று இதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது.
இப்படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துகளையும் சூர்யா தெரிவித்துள்ளார். பிரமாண்டமாகவும் மாஸாகவும் உருவாக்கப்பட்டுள்ள ட்ரைலர், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
இதையும் படிங்க:தி வாரியர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!