இயக்குநர் அகத்தியனின் இளைய மகளும் நடிகையுமான நிரஞ்சனியை 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்பட இயக்குநர் தேசிங் பெரியசாமி திருமணம் செய்யவுள்ளார்.
துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன் நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியானது.
இப்படத்தில் இயக்குநர் அகத்தியனின் மகளும் ஆடை வடிவமைப்பாளருமான நிரஞ்சனி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை நடிகர் ரஜினியும் பாராட்டியுள்ளார். இயக்குநர் தேசிங் பெரியசாமியுடன் ரஜினி பேசிய ஆடியோவும் சமூகவலைதளத்தில் வெளியானது.
படத்தின் இயக்குநர் தேசிங்கும், நடிகை நிரஞ்சனியும் அப்படத்தின் படப்பிடிப்பின்போது காதலித்துள்ளனர். இந்தக் காதல் தற்போது திருமண பந்தமாக மாறவுள்ளது.
நிரஞ்சனி, தேசிங் பெரியசாமியை திருமணம் செய்யவுள்ள செய்தியை அகத்தியனின் மூத்த மகளான குக் வித் கோமாளி புகழ் கனியின் கணவரும் இயக்குநருமான திரு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்? கல்யாணம்!' என ட்வீட் செய்து திருமணப் பத்திரிகையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
நிரஞ்சனி 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படத்தில்தான் அறிமுகமானார். முன்னதாக 'வாயை மூடி பேசவும்', 'சிகரம் தொடு', 'காவியத் தலைவன்', 'கபாலி' போன்ற திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
ஆச்சரியமூட்டும் விஷயமாக நிரஞ்சனியின் மூத்த சகோதரி கனி இயக்குநர் திருவை திருமணம் செய்தார். மற்றொரு சகோதரியும் நடிகையுமான விஜயலட்சுமி இயக்குநர் ஃபெரோஸை திருமணம் செய்தார். தற்போது நிரஞ்சனியும் இயக்குநரை திருமணம் செய்யவிருக்கிறார்.
கனி, விஜயலட்சுமியுடன் நிரஞ்சனி
இதையும் படிங்க...விரைவில் திரைக்கு வருகிறது சமுத்திரக்கனியின் "ஏலே"