இந்தியாவில் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றில் பிரிவுகள் இருந்தாலும் கலை, பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களில் பிரிவுகள் இன்றி ஒருமித்த கருத்து நிலவுவதாலேயே, பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படங்களை மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இதுபோன்று மொழி மாற்றம் செய்யப்படும் படங்கள் மாபெரும் வெற்றியும் அடைந்துள்ளதால், தொடர்ந்து மொழி மாற்றுப் படங்களை தங்கள் மொழிகளில் உருவாக்குவதில் திரையுலகத்தினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
தமிழில் கடந்த ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படம் இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக் ஆகும். அதனைத் தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இந்தியில் வெளியாகி வெற்றிப்பெற்ற 'ஆர்டிக்கிள் 15' படம் தயாராக உள்ளது. இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் ரீமேக்கை 'கானா' திரைப்பட இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளார்.
இயக்குநரும் தயாரிப்பாளருமான போனி கபூர் 'ஆர்டிக்கிள் 15' படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்று தமிழில் ரீமேக் செய்யவுள்ளனர். ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூரின் பே வியூ ப்ரொஜெக்ட் வழங்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில் பணியாற்ற உள்ள நடிகர், நடிகை தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.