நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நவம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து டிசம்பர் 1ஆம் தேதி கரோனா தொற்றிலிருந்து கமல் ஹாசன் முழுவதுமாக மீண்டுவிட்டார் என்றும், இரண்டு நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொண்டு, பின்னர் வழக்கமான பணிகளைத் தொடரலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் கமல் ஹாசன் இன்று (டிசம்பர் 4) பணிக்குத் திரும்புவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன்போல கவனித்து சிகிச்சையளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி தலைமையிலான மருத்துவர்களுக்கும், செவிலியருக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், என்னிரு மகள்களுக்கும், ஊண் உறக்கம் இன்றி உடனிருந்து கவனித்துக்கொண்ட என் அணியினருக்கும், மகேந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நான் விரைந்து நலம்பெற வேண்டுமென வாழ்த்திய இனிய நண்பர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் என் நன்றிகள்.
என் ஆரூயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, மாறாத பிரியம் வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, இனிய நண்பர்கள் சத்யராஜ், சரத்குமார், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட திரைத் துறை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் என் நன்றிகள்.