தமிழ்நாட்டில் 90களின் தொடக்கத்தில் பல இளம்பெண்களின் கனவுக் கண்ணனாக இருந்தவர் நடிகர் அரவிந்த் சாமி. இவர் இன்று தனது 54ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நடிகர் அரவிந்த் சாமி ஜூன் 18, 1967ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.
இயக்குநர் மணிரத்னத்தின் தளபதி படம் மூலம் 1991ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அரவிந்த் சாமி. அறிமுகமான முதல் படத்திலேயே ரஜினி, மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தார். மீண்டும் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்த ரோஜா திரைப்படத்தின் மூலம் பேசுபொருளானார்.
1990களின் ஆரம்ப காலத்தில் நடிகர் அரவிந்த் சாமியின் தோற்றம். மேலும் இவர் தொடர்ந்து நடித்த பம்பாய், இந்திரா, மின்சாரக் கனவு, என் சுவாசக் காற்றே போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட நான்கு மொழிகளிலும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் ஒருகட்டத்தில் நடிப்புக்கு முழுவதுமாக முழுக்கு போட்டுவிட்டு, வியாபாரத்தை கவனிக்க தொடங்கினார்.
தனது விவாகரத்திற்கு பின்னர் 2013ஆம் ஆண்டு வெளிவந்த ’கடல்’ படத்தில், குணச்சித்திர நடிகராக மீண்டும் திரைத்துறையில் காலடி பதித்தார் அரவிந்த்சாமி. தான் வில்லனாக நடித்து வெளிவந்த தனி ஒருவன் படத்தின் மிகப்பெரும் வெற்றியினால் தமிழ் சினிமா உலகத்தையே உற்று நோக்க வைத்தார். அதன் பின்னர் வரிசையாக அவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின.
எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி. விரைவில் வெளியாக உள்ள ’தலைவி’ படத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (ஜூன்.18) பிறந்தநாள் காணும் நடிகர் அரவிந்த் சாமிக்கு #HBDARVINDSWAMY என்ற ஹேஷ்டேக் மூலம் அவரது ரசிகர்கள் சமூக வலைதலங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : 'சூப்பர் டா தம்பி' வாழ்த்தும் அசுரனின் அண்ணன்கள் !