மும்பை: மறைந்த இசையமைப்பாளர் வஜித்கான் தாயார் ரஸீனா கானுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மும்பையிலுள்ள சுரனா செத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஸீனா கானுக்கு, கரோனா தொற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அவர் குணமடைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கரோனா பாதிப்பு இருந்த நபரிடம் தொடர்பு வைத்ததன் காரணமாக அவருக்கு தொற்று பரவியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மருத்துவமனையில்தான் சிறுநீரக தொற்று காரணமாக வஜித்கான் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கரோனா தொற்று இருந்ததாகவும் கூறப்பட்டது.
இவரது மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இவரது தாயார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனிடையே, வஜித்கானின் இறுதிசடங்கு மும்பையிலுள்ள வெர்ஸோவா சிமெட்ரியில் நடைபெற்றது. இதில் விஜித்கான் சகோதரர் சஜித்கான் பங்கேற்றார்.
முன்னதாக வஜித்கான் மறைவு குறித்த தகவலை பிரபல இசையமைப்பாளர் சலீம் மெர்செண்ட் தெரிவித்தார். இதையடுத்து அமிதாப் பச்சன், பிரியங்கா சோப்ரா, பிரணீதி சோப்ரா. அக்ஷய் குமார், சோனம் கபூர், அர்ஜூன் கபூர், நேகா துபியா உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் வஜித்கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.