மும்பை: கிரிமினல்களை ஹீரோ போன்று சித்தரித்தால் இதுபோன்றுதான் நடக்கும் என்று மிர்சாபூர் வெப்சீரிஸ் மற்றும் பாலிவுட் திரையுலகை சாடி குறிப்பிட்டுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்.
கடந்த 26ஆம் தேதி கல்லூரி மாணவி நிகிதா தோமரை துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட கொலையாளியின் வாக்குமூலத்தை தனது ட்விட்டரில் ரீட்வீட் செய்துள்ளார் கங்கனா ரணாவத்.
அதில், “கிரிமினல்களை முன்னிலைப் படுத்தினால் இது தான் நடக்கும். பார்ப்பதற்கு நல்ல தோற்றத்தில் இருப்பவரை, இதுபோன்ற எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பதுடன் அவர்கள் வில்லன்களாக இல்லாமல் ஆன்ட்டி ஹீரோக்களாக காட்டப்படுகிறார்கள். இதைத் தொடர்ந்து செய்து, சமூகத்தில் நல்லதை காட்டிலும் அதிக சேதத்தை ஏற்படுத்தி வரும் பாலிவுட் திரையுலகினர் மற்றும் மிர்சாபூர் வெப்சீரிஸ் தொடர் தயாரிப்பாளர்கள் வெட்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்லூரி மாணவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொலையாளி தனது வாக்குமூலத்தில், மிர்சாபூர் 2 வெப்சீரிஸில் வரும் கதாபாத்திரத்தை பார்த்துதான் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நடிகை கங்கனா, கல்லூரி மாணவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கொலையாளியின் வாக்குமூலத்தை பகிர்ந்து மிர்சாபூர் 2 வெப் சீரிஸ் தொடர் மற்றும் பாலிவுட் திரையுலகினரை சாடியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை கல்லூரியில் தேர்வு முடித்துவிட்டு வீடு திரும்பிய மாணவி நிகிதா தோமரை வழிமறித்த இருவர், அவரை இஸ்லாம் மதத்துக்கு மாறுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அவர் மறுக்கவே அவரை மிரட்டிய இருவரில் ஒருவர் தான் எடுத்து வந்த துப்பாக்கியால் மாணவியை சுட்டுக் கொன்றார்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் இது தொடர்பான மிரள வைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.
இதைத்தொடர்ந்து பாலிவுட் துறையினர் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ததுடன், குற்றவாளி உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தனர்.
இதுதொடர்பாக நடிகை கங்கனா அக்டோபர் 28ஆம் தேதி தனது ட்விட்டர் பதிவில், பிரான்சில் நடைபெற்ற சம்பவத்தை கண்டு ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் போராளிகள் என்று தங்களைக் கூறிக் கொண்டு கொஞ்சமும் வெட்கப்படாமல், சட்டத்தின் மீது பயமும் இல்லாமல் இஸ்லாம் மதத்துக்கு மாற மறுத்த பெண்ணை கொலை செய்துள்ளனர். இந்தச் செயலுக்கு உடனடி நடவடிக்கை தேவை என்று #weWantEncounterOfTaufeeq என்ற ஹேஷ்டேக்குடன் குறிப்பிட்டிருந்தார்.