மும்பை: ஹாலிவுட்டில் சக்கைபோடு போட்ட 'தி இன்டர்ன்' திரைப்படத்தின் தழுவல் பாலிவுட்டில் தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகவுள்ளது.
இந்தப் படத்தில் தீபிகா படுகோனேவுடன் இணைந்து மூத்த நடிகர் ரிஷி கபூர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அஸுரே எண்டர்டெயின்மென்ட் மற்றும் வார்னர் ப்ரோஸ் இந்தியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. 2021ஆம் ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதுபற்றி தீபிகா படுகோனே கூறியதாவது:
'தி இன்டர்ன்' திரைப்படம் பணியிடங்களில் ஏற்படும் நெருக்கமான உறவுகளின் மகிமையை சொல்லும் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் கதை நிகழ்காலத்திலுள்ள சமூக மற்றும் கலாச்சார சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.
ஒரு இனிமையான நகைச்சுவை கதையை எதிர்நோக்கி இருந்தேன். அதற்கு இந்தப் படம் பொருத்தமாக இருக்கும். இந்தப் படத்துக்கான பயணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று கூறினார்.
'தி இன்டர்ன்' தழுவலில் உருவாகும் படத்தில் நடிப்பது பற்றி ரிஷி கபூர் கூறியதாவது:
இந்தியர்களின் தற்போதைய பணிச்சூழலுக்கு உகந்த 'தி இன்டர்ன்' திரைப்படம் மனித உறவுகளின் மகத்துவத்தை அருமையாக பதிவுசெய்திருந்தது. இதயத்துக்கு நெருக்கமான இந்தக் கதையில் தீபிகாவுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றார்.
நான்சி மேயர்ஸ் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான படம் 'தி இன்டர்ன்'. இந்தப் படத்தில் பிரதான கதாபாத்திரங்களில் ராபர்ட் டீ நிரோ, ஆனி ஹதாவே ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்தப் படம் வசூலிலும் கலக்கியது.
தற்போது இவர்களின் கதாபாத்திரத்தில்தான் ரிஷி கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் நடிக்கவுள்ளனர்.