யுனிசெஃப் உடன் இணைந்து அனைத்து குழந்தைகளுக்குமான உரிமைகளுக்காக குரல் கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பாதுகாப்பான குழந்தைப் பருவம் என்பதையே அனுபவிக்காத குழந்தைகள் குறித்து தான் பெரும் கவலை கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய அவர், "யுனிசெஃப் உடன் குழந்தைகளுக்காக குரல் கொடுக்க நான் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்க்கையில் ஒரு சிறந்த தொடக்கத்திற்கு அனைவருமே தகுதியானவர்கள் என நான் நம்புகிறேன். என் குழந்தைகள் எங்கள் வீட்டின் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் விளையாடுவதைப் பார்க்கும்போது, வீட்டிற்குள்ளேயும் வெளியேயும் ஒருபோதும் பாதுகாப்பை அனுபவிக்க முடியாத அனைத்து குழந்தைகளையும் குறித்து நான் கவலை கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உரிமைகளை ஆதரித்து, அவர்கள் வன்முறைகளிலிருந்து விடுபட்டு, சரியான சூழலில் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, நன்கு படித்த குடிமக்களாக வளர்வதை தான் எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.