விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் வசித்துவரும் திமுக தென்காசி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தனுஷ்.எம்.குமார். அவரின் உறவினர் கருப்பையா (வயது 55), அப்பகுதியில் ஊர் தலைவராகவும், ரேசன் கடையில் எடைநிறுத்த ஊழியராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தேவதானம் ஊரின்அருகே உள்ள கண்மாய் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கருப்பையா வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். தகவலறிந்த சேத்தூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
மேலும் சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் பார்வையிட்டார், கொலைக்கான காரணம் முன் விரோதமா? வேறு எதுவும் காரணமா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக பிரமுகர் கொலையால் பதற்றம் மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த ஆறுக்கும் மேற்பட்ட நபர்களிடம் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.