செங்கல்பட்டு: மகளைக் காணவில்லை எனப் புகாரளிக்க வந்த தந்தை, விரக்தியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். ஆட்டோ ஓட்டுநரான இவரது, 14 வயது மகள், டிசம்பர் 3ஆம் தேதி காணாமல் போனதாகத் தெரிகிறது. இதுகுறித்து, சேலையூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர்.
காவல் துறையினரும், புகாரைப் பதிந்து காணாமல் போன சிறுமியைத் தேடிவந்தனர். இச்சூழலில், மகள் கிடைக்காத விரக்தியில் இருந்த சீனிவாசன், நேற்று முன்தினம் சேலையூர் காவல் நிலையம் எதிரே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் சீனிவாசன் உயிரழந்தார்.
மகளைக் காணாததால், ஆட்டோ ஓட்டுநர் சேலையூர் காவல் நிலையம் எதிரில் தீக்குளித்து உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.