தமிழ்நாடு

tamil nadu

By PTI

Published : Sep 7, 2023, 4:28 PM IST

ETV Bharat / international

திமோர்-லெஸ்டே நகரில் இந்திய தூதரகம்; ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் அறிவிப்பு!

PM Modi announces to open an Indian embassy in Timor-Leste: திமோர்-லெஸ்டே நகரில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

ஜகார்த்தா (இந்தோனேஷியா): இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு (ASEAN-India summit) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (செப் 6) இந்தோனேஷியாவுக்குச் சென்றார். பின்னர், ஆசியன் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார்.

அப்போது, திமோர்-லெஸ்டே நகரில் இந்திய தூதரகம் அமைக்கப்பட உள்ளதாகவும், ஆசியான் - இந்தியா ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக 12 அம்ச திட்டத்தையும் பிரதமர் வெளியிட்டார். இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்திய தூதரகத்தை டிலி மற்றும் திமோர் - லெஸ்டே நகரில் அமைக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

இந்த முடிவானது, இந்தியா - ஆசியான் உடன் கொண்டு உள்ள ஒத்துழைப்பையும், திமோர்-லெஸ்டே உடனான உறவின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த முடிவை திமோர்-லெஸ்டே மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகள் மகிழ்ச்சியாக வரவேற்று உள்ளனர்” என தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தாம் பக்சி வெளியிட்டு உள்ள 'X' வலைதளப் பதிவில், “கிழக்கை நோக்கி, டெல்லி முதல் டிலி வரை. டிலி மற்றும் திமோர்-லெஸ்டேவில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்” என தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு எனப்படும் ஆசியான் கூட்டமைப்பில், கடந்த 2022ஆம் ஆண்டு தன்னை ஒரு பார்வையாளராக இணைத்துக் கொண்ட திமோர்-லெஸ்டே, அதன் பின்னர் முழு நேர உறுப்பினராகவும் தன்னை இணைத்துக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “ஆசியான் அமைப்பு உலக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆசியான் கூட்டமைப்பு உடன் இணைந்து செயல்படுவது என்பது, இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆசியான் அமைப்பில் உள்ள பிற நாடுகளுக்கும் இந்தியா தனது உதவிக்கரத்தை எப்போதும் நீட்டி வருகிறது” என்றார்.

இதனையடுத்து, பயங்கரவாதம் மற்றும் மூலோபய கூட்டாண்மை குறித்து பேசிய பிரதமர், டிஜிட்டல் மாற்றம், வர்த்தகம் மற்றும் வணிக மேலாண்மை ஆகியவற்றில் இந்தியா - ஆசியான் ஒத்துழைப்பு வலுப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச திட்டத்தையும் வெளியிட்டார்.

இதன் பின்னர், கூட்டம் நிறைவடைந்த பிறகு ஆசியான் கூட்டமைப்பின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து. இந்தோனேஷியாவில் இருந்து பிரதமர் டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். மேலும், நாளை (செப் 9) மற்றும் நாளை மறுநாள் (செப் 10) ஆகிய இரு நாட்கள் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது.

இந்தியா தலைமை தாங்கும் இந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:G20 Summit: ஜி20 மாநாட்டில் இந்தியா நிலைநிறுத்தும் பிரதிநிதித்துவம் என்ன? - பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்

ABOUT THE AUTHOR

...view details