கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிலிருந்து நேற்று (மார்ச்.10) காலை தலைநகர் அடீஸ் அபபாவிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி நகருக்கு எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
அந்த விமானம் புறப்பட்ட ஆறு நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து, விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 149 பயணிகளும், எட்டு ஊழியர்களும் உயிரிழந்ததாக எத்தியோப்பிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 30 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்த விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கோர விபத்திற்கு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபி அகமது அலுவலகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று(மார்ச்.10) நிகழ்ந்த இந்த விமான விபத்திலிருந்து, கிரேக்க நாட்டைச் சேர்ந்த அண்டோனீஸ் மாவ்ரோபொலோஸ் மட்டும் உயிர்தப்பினார். இரண்டு நிமிடம் தாமதமாக வந்ததால், விமானத்தை அவர் தவறவிட்டார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் “என்னுடைய அதிர்ஷ்ட நாள்“ என்று தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும்,“நான் பைத்தியக்காரன். ஏனென்றால், யாராவது என்னை நுழைவுவாயில் அருகே அழைத்துச் செல்ல உதவமாட்டார்கள் என்று அந்த நேரத்தில் புலம்பிக்கொண்டிருந்தேன்” என பதிவிட்டுள்ளார்.
மாவ்ரோபொலோஸ் இன்டர்நேஷனல் சாயில்ட் வேஸ்ட் அஸோஷியேனின் தலைவர் ஆவார். இவர் நைரோபியாவில் ஏதென்ஸ் நியூஸ் ஏஜென்ஸி நடத்திய ஐநா சுற்றுச்சூழல் திட்டத்திற்கான வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்க விமான மூலம் பயணிக்க திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் எத்தியோப்பியா விமானத்தில் பயணிப்பதற்காக வந்தபோது, இரண்டு நிமிடம் தாமதமாக வந்ததால், அந்த புறப்படும் நுழைவுவாயில் மூடப்பட்டது.
இதையடுத்து, அவர் மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்திருந்தார். ஆனால், விமான ஊழியர்கள் அவரை நுழைவாயிலில் தடுத்து நிறுத்தினார்கள்.
விமான ஊழியர்கள், மார்வோபொலோஸை விமான நிலையத்திலிருந்த காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த அதிகாரி ஒருவர், 'நீங்கள் ஆர்பாட்டக்காரர் இல்லை. கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால், தாங்கள் தவறவிட்ட விமானம் விபத்துக்குள்ளானது. அதில் நீங்கள் ஒருவர்தான் பயணிக்கவில்லை' என கூறியதைக் கேட்டு, அதிர்ச்சியில் மாவ்ரோபொலோஸ் உறைந்துவிட்டார்.
மார்வோபொலோஸ் கூறுகையில், “என்னை சோதனை செய்வதற்கு முன்பாக விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது என்றனர். காரணம் என்னவென்றால், என்னிடம் ஆதாரங்கள் சரியாக இல்லை” என பதிவிட்டிருந்தார்.