இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஜாவா தீவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 16 பேர் மாயமாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது.
நிலச்சரிவு ஏற்பட்ட கிழக்கு ஜாவாவின் நங்கன்ஜுக் மாவட்டத்தில் உள்ள செலாபுரோ கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புப்படையினர் குவிக்கப்பட்டு, மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த மீட்பு படையில் தன்னார்வலர்களும், காவல் துறையினரும் தங்களை இணைத்துக் கொண்டு களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய தேசிய பேரிடர் தொடர்பாளர் ராதித்யா ஜதி, “தீவைச் சுற்றியிருக்கும் மலைகளிலிருந்து மண் சரிந்ததில் குறைந்தபட்சம் எட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. 21 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். 14 பேர் படுகாயமடைந்தனர். மண்ணுக்குள் புதைந்தவர்களில் இருவரது உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. மூன்று பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போதிய கனரக உபகரணங்கள் இல்லாததால் காணாமல் போனவர்களைத் தேடும் பணி மந்தமாக நடக்கிறது” என்றார்.
இதையும் படிங்க:பிரேசிலில் சிலிண்டர் வெடித்து நால்வர் மரணம், 2 பேர் படுகாயம்