பருவமழை காரணமாக பாகிஸ்தான், வங்கதேசத்தின் ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இரு நாடுகளிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியுள்ளார். இரு நாட்டிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, கரோனா பாதிப்பு குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் வர்த்தகம் உள்ளிட்ட இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன் கூறுகையில், "1971ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்த 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானியர்களால் கொல்லப்பட்டனர்.
அதை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. இருப்பினும், அண்டை நாட்டுடன் நல்ல உறவைக் கொண்டிருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். இரு தலைவர்களும் அந்தந்த நாட்டில் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பு, வெள்ளப்பெருக்கு பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தனர்" என்றார்.