பாலிவினைல் குளோரைடு (பிவிசி) உலகளவில் அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படும் மூன்றாவது வகை பிளாஸ்டிக் ஆகும். இதனைக் கட்டுமானம், விவசாயம் என பல்வேறு வகையில் பயன்படுத்துகின்றனர். பிவிசி மிகவும் நீடித்த மற்றும் நெகிழ்வுத் தன்மை கொண்டது. கடந்த ஜூன் மாதத்தில் இந்த பிவிசி பிளாஸ்டிக்கை சீனா அதிகளவில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து குளோபல் ரப்பர் சந்தைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூன் மாதத்தில் இந்தியாவிலிருந்து 27,207 மெட்ரிக் டன் பிவிசியை சீனா இறக்குமதி செய்தது. இதுவே மே மாதத்தில் வெறும் 5,174 மெட்ரிக் டன் பிவிசியை மட்டுமே சீனா இறக்குமதி செய்திருந்தது.
இதனுடன் ஒப்பிடும்போது ஜூன் மாதம் இறக்குமதி அளவு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஊரடங்கில் இந்தியா பிவிசி ஏற்றுமதியைத் துரிதப்படுத்தியுள்ளது. இந்தச் செயல் மிகவும் அரிதான ஒன்றாகும். ஊரடங்கால் இந்தியாவில் பிவிசி தேவைகள் அவசியம் இல்லாமல் போனதால், பிவிசி தயாரிப்பாளர்கள் பொருள்கள் வீணாவதைத் தவிர்ப்பதற்காகச் சரக்குகளை சீனாவுக்கு அனுப்பவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். அதன் விளைவாகவே பிவிசி ஏற்றுமதி அதிகரிக்கக் காரணம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
எல்லைப் பிரச்னையால் சீனாவிலிருந்து இறக்குமதியைத் தடுப்பதற்கான வழிகளில் ஈடுபட்டுள்ள இந்திய அரசு, பல சீனச் செயலிகளுக்கு தடைவிதித்தது. அதேசமயம் சீனாவிற்கு அதிகளவில் பிவிசியை ஏற்றுமதி செய்து சத்தமில்லாமல் புதிய சாதனையைப் படைத்துள்ளது.