பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் அருகே லாகூரிலிருந்து கராச்சிக்கு வந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 97 பேர் பயணம் செய்த நிலையில் அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட தகவலின்படி, விமானம் பறக்கும் உயரத்தைக் குறைக்க விமானிக்கு கட்டுப்பாட்டு அறை அறிவுறுத்தியுள்ளது. விமானம் பறக்கும் உயரத்தை விமானி குறைக்காமல், 'தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, நான் சமாளித்துவிடுவேன்' எனப் பதிலளித்துள்ளார்.
கராச்சி விமான நிலையத்திலிருந்து 10 கடல் மைல் தொலைவில் விமானம் இருந்தபோதும், விமானக் கட்டுப்பாடு அறை, விமானம் பறக்கும் உயரத்தைக் குறைக்க வலியுறுத்தியுள்ளது. அப்போதும், உயரத்தைக் குறைக்காமல், 'சரியாக தரையிறங்கி விடுவேன்' என விமானி தெரிவித்துள்ளார். இருமுறை விமானக் கட்டுப்பாடு அறை விடுத்த எச்சரிக்கையைப் புறக்கணித்ததே விமான விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விமான விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் பாகிஸ்தான் அரசுக்கு உதவ உள்ளது. விமானத்தின் என்ஜின் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கோணத்தில் இந்த ஆய்வு நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:இந்திய அமெரிக்க தம்பதி கண்டுபிடித்த விலை மலிவான வென்டிலேட்டர்