உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் காரணமாக இதுவரை 213 நாடுகளைச் சேர்ந்த 52 லட்சத்து 17ஆயிரத்து 398 பேர் பாதிக்கப்பட்டும், 3 லட்சத்து 35ஆயிரத்து 58 பேர் உயிரிழந்தும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
நாளுக்குநாள் அதிகரித்துவரும் அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அதிக கவனம் செலுத்திவரும் வேளையில், கோவிட்-19க்கு பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கும் பழங்குடி மக்கள் அவற்றில் விலக்கப்பட்டுள்ளாதாக கருதப்படுகிறது.
உலக வங்கியின் கூற்றுப்படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் 370 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நியூயார்க், நியூ ஜெர்சி போன்ற அதிக வருவாய் உள்ள நாடுகளில் கூட, தனிநபர் தொற்று வீதத்தை கவனத்தில் கொண்டு பார்த்தால் நவாஜோ போன்ற பழங்குடி குழுக்கள் கோவிட்-19 காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவ ஆய்வுகளின் மூலமாக வெளிவரத் தொடங்கியது உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
இதனையடுத்து, பழங்குடி மக்கள் மத்தியில் பரவிவரும் கோவிட் -19 தாக்கத்தை தணிப்பதற்கான ஒரு ஏற்பாட்டை மானுடவியலாளர்கள், மருத்துவர்கள், பழங்குடித் தலைவர்கள் கூட்டிணைந்து உருவாக்க முனைந்துள்ளதாக தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.
பரந்த பார்வையாளர்களை அடைய, ஆசிரியர்கள் தங்கள் ஆய்வறிக்கையை ஆங்கிலத்தில் மட்டுமல்ல, பழங்குடி மக்கள் வசிக்கும் நாடுகளில் பேசப்படுகிற ஸ்பானிஷ், போர்த்துகீசியம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர்.