தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 26, 2021, 3:04 PM IST

ETV Bharat / city

விஷம் அருந்தி நகராட்சி ஊழியர் தற்கொலை!

வேலூர்: ஆற்காடு சாலையிலுள்ள விடுதியில் நகராட்சி ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

suicide
suicide

திண்டுக்கல் மாவட்டம், போடிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சன்(46). இவர், கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில் தூய்மை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.23) வந்தார். ஆற்காடு சாலையிலுள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் அறைக்கு வந்தவர் வெளியே வரவில்லை. இரண்டு நாட்களாக அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் நேற்றிரவு (ஏப்.25) கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு ஜான்சன் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அவரது உடல் அருகே விஷம் பாட்டில் ஒன்று கிடந்தது. இதுகுறித்து விடுதி உரிமையாளர் வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அறையில் சோதனையிட்டு, ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். ஜான்சன் தங்கியிருந்த அறையிலிருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

அதில், எனக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், நான் உயிர் வாழ விரும்பவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனவே நான் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதியிருந்தார்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போடிநாயக்கனூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து ஜான்சன் அறையில் இருந்து மீட்ட கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையது தானா, தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details