திருவாரூர் : தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் திருவாரூர் மாவட்டம் கோட்டூர்,முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஒன்றிய பகுதிகளில் தண்ணீர் இன்றி விளைநிலங்கள் பாலைவனமாக காட்சி அளிப்பதை நேரில் சென்று பார்வையிட்டார்.
விவசாயிகள் வேதனை
பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு நேரடி விதைப்பு நடவு நடுவதற்கு நாற்று விடும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. தண்ணீரின்றி நடவு பணி மேற்கொள்ள முடியாமலும் விதைத்த நெல் மணிகள் முளைக்காமல் கருகி வருவதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கூடுதல் நீர் திறக்க வேண்டும்
எனவே மேட்டூரிலிருந்து 18 ஆயிரம் கனஅடி நீரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுவரை 10,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுவதால் ஆறுகளில் மட்டும் கடைமடைக்கு தண்ணீர் சென்றிருக்கிறதே தவிர, எந்த ஒரு கிராமத்திற்கோ, விளை நிலங்களுக்கோ நீர் செல்ல்வில்லை. இதனால் நிலங்கள் பாலைவனமாக காட்சி அளிக்கிறது. மேலும் காவிரி நீரை பெறுவதற்கு முதலமைச்சர் ஆணையத்திற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.