தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் நிர்வாகிகள் பலர் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ராஜா கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இரண்டு ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தோம்.
அதன்பேரில் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதுதொடர்பாக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். பிப்ரவரி 23ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்திட, அரசாணை வெளியிட அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கியுள்ளோம்.
பிப்ரவரி 23ஆம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஆட்சியரிடம் மனு இதற்கான உரிய வழிமுறைகளின் படி அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். தென் மாவட்டங்களில் மதுரைக்கு தெற்கே ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்ததில்லை. ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுமேயானால் பக்கத்து மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரளும் மிகப்பெரிய ஜல்லிக்கட்டுப் போட்டியாக இது இருக்கும்” என்றார்.