தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா, தருவைக்குளம் மீன்பிடி இறங்குதளத்தை தங்குதளமாகக் கொண்டு, மரிய குணசேகரன் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான விசைப்படகில், தருவைக்குளத்தைச் சேர்ந்த சேயராஜன், அந்தோணி ராஜ், தீபன், ஜோசப், மரிய குணசேகரனின் மகன் ஜாண்சன் (படகு ஓட்டுனர்), வேம்பாரை சேர்ந்த வின்சன், சின்ராஜ், சிலுவைப்பட்டியை சேர்ந்த அந்தோணி பிச்சை, விஜய், நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த ரோஸ்டன் ஆகிய 10 மீனவர்கள், கடந்த 18 ஆம் தேதி, மினிகாய் தீவு கடற்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆழ்கடலில் ரோந்து வந்த மினிகாய் தீவு கடலோரக் காவல் படையினரால், தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரும் சிறைபிடிக்கப்பட்டனர். இதையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தரவேண்டுமென அவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.