சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 8) கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதலமைச்சர், அலுவலர்களிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தொய்வில்லாமல் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இ-பாஸ் நடைமுறையில் உள்ள சிக்கல்களை போக்குவதற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோருக்கு இ-பாஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின் அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்படும்.
உலக சுகாதார நிறுவனம் வழங்கும் பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றி தமிழ்நாடு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே, கரோனா வைரஸ் இல்லாத சூழல் உருவாகும்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், "தமிழ்நாட்டில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இருமொழிக் கொள்கை மட்டும் கடைபிடிக்கப்பட்டுவந்தது. அதேபோல தற்போதும் பின்பற்றப்படும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்துவருகிறது. முழு கொள்ளளவை எட்டியப் பிறகு காவிரி டெல்டா பாசனத்திற்காக கிழக்கு மேற்கு கால்வாய்கள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதியாக அவர், "எஸ்வி சேகர் பேச்சை நாங்கள் ஒருபோதும் பொருள்படுத்துவதில்லை. அவர் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்தார். முன்னதாக, மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பேட்டரியில் இயங்கக்கூடிய சக்கர நாற்காலிகளை முதலமைச்சர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரூ.165.25 கோடி மதிப்புள்ள திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!