சேலம்:தமிழ்நாடு முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா நேற்று (ஏப்ரல் 11) சங்ககிரி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் வழிபட்டார். எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் வழிபட்ட சசிகலா, அங்கு திரண்டு இருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், "எம்ஜிஆர் இந்த இயக்கத்தை ஆரம்பித்து வளர்த்தார்.
அவரை தொடர்ந்து ஜெயலலிதா வளர்த்து கட்டிக் காத்து வந்தார். ஆரம்ப காலத்திலிருந்து கொங்கு மண்டல மக்கள் அதிமுகவிற்கு பெரிய ஆதரவு கொடுத்து வந்தனர். நான் என்றைக்கும் கொங்கு மண்டலத்தை மறக்க மாட்டேன். நம் புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவியால் வளர்க்கப்பட்ட இயக்கம் எத்தனையோ இடர்பாடுகள் தாண்டி வளர்ந்து வந்திருக்கிறது.
ஆட்சிக்கட்டிலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்காக உழைத்தார்கள். மக்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்தார்கள். தொண்டர்கள் பலத்தினால், நான் மிக விரைவில் அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவேன். அது வரை நான் ஓய மாட்டேன். தொண்டர்களால் தான் இந்த இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்" என்று தெரிவித்தார்.