சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள கிளியூர் அருகே உள்ளது கொடிக்காடு என்னும் மலை கிராமம். இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதிகள் எதுவும் இன்றுவரை அமைத்து தரப்படவில்லை. சாலை வசதிகள்கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை இப்பகுதி மக்கள் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கொடிக்காடு கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இச்சூழலில், சமீபத்தில் கொடிக்காடு பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனம்கூட அப்பகுதிக்கு வர முடியாத நிலையில், போர்வையை தூளியாகக் கட்டி அவரை அதில் படுக்க வைத்து தூக்கிச் சென்று, ஏற்காடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் அப்பகுதிவாசிகள்.
சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை, கரடுமுரடான மலைப்பாதையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உயிருக்குப் போராடிய முதியவரை தோளில் தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பகுதிவாசிகள் அனுமதித்த காணொலிப் பதிவு, சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.