தமிழ்நாடு

tamil nadu

'நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் வரவேற்கத்தக்கது' - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்

தென் மாவட்டங்களில் தொழில் வாய்ப்பை பெருக்குவதற்கான முயற்சியில் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் வரவேற்கத்தக்க முடிவு என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

By

Published : Jul 6, 2021, 7:46 PM IST

Published : Jul 6, 2021, 7:46 PM IST

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் வரவேற்கத்தக்கது
நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் வரவேற்கத்தக்கது

மதுரை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நேர்முக வேலை வாய்ப்பு, மறைமுக வேலைவாய்ப்பு, தொழில் முதலீடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துத் தரும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.

இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "தென் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொண்டு நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் முன்னிலைப்படுத்தி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த பெரும் முனைப்பு காட்டி வரும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

தென் தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள தொழில்கள்

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களும், பெருந்தொழில்களும் தென்மாவட்டங்களில் அதிகளவில் நிறுவப்பட வேண்டும். சேவைத் துறை, தளவாடங்கள், நீராதாரத்துறை, மென்பொருள் துறை, மின்னணுவியல், உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் துறை, தோல் பொருட்கள் உற்பத்தித் துறை, நிலம் சார் குறியீடு பெற்ற பொருட்கள் போன்றவை தென் தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள தொழில்களாக உள்ளன.

தொழில்துறை முன்னேறத் தேவையான மூலப்பொருட்கள், மனித வளம், மூலதனம், உற்பத்தி பொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்ல வாய்ப்பு போன்ற கட்டமைப்புகள் தென் தமிழ்நாட்டில் அதிகளவில் உள்ளன.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

நடைமுறைகளை எளிமைப்படுத்து வேண்டும்

தொழிற்சாலைகள் துவங்கத் தேவையான அடிப்படை கட்டமைப்பு, பன்னாட்டு, உள்நாட்டு விமான நிலையங்கள், சிறிய, பெரிய துறைமுகங்கள், தரமான ரோடு வசதிகள், மருத்துவக் கட்டமைப்பு. தொழில்துறை விதிமுறைகளை எளிமைப்படுத்தல், தொழில் முனைவோருக்கு சலுகைகள், பத்திரப்பதிவு, நிலம் கையகப்படுத்தல், மின்சாரம், நீர்வளம், தேவையான நிதி உதவி, புதிய முதலீடுகளை ஊக்கப்படுத்தல், தொழில் துவங்க அரசிடம் பெற வேண்டிய பல்வேறு அனுமதிகளில் உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் தென் தமிழ்நாட்டில் தொழில்கள் அதிக அளவில் துவக்கப்பட வசதியாக இருக்கும்.

தொழிலில் வளர்ச்சி காண

மேலும், இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் துவங்க, தொழிலில் வளர்ச்சி காண, பொருட்களை சந்தைப்படுத்துதல், தொழிலில் ஏற்படும் இடர் களைதல் போன்றவற்றிற்கு தொழில் வல்லுநர்களைக் கொண்டு தொழில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

தென் மாவட்டங்களை விட தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில், தொழிற்சாலைகள் அதிகளவில் அமைக்கப்படுவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்கள் தொழில்துறையில் வளர்ச்சி கண்டுள்ளன. பிற மாவட்டங்களை விடக் குறைந்த மக்கள் பெருக்கம் கொண்டுள்ள அந்த மாவட்டங்களில் தொழில்கள் ஏராளமாக அமைவதால் அம்மாவட்டங்களின் நிலப்பரப்பும், மக்களின் இடப்பெயர்ச்சியினால் மக்கள் பெருக்கமும் அதிகமாகியுள்ளது.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் என்.ஜெகதீசன்

இடம்பெயரும் அவலம்

தென் தமிழ்நாடு அதிகளவில் தொழில் வளர்ச்சி பெறாததால் படித்த, படிக்காத இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களுக்கு இடம்பெயரும் அவலம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. இப்பகுதியில் ஒரு பெரிய தொழிற்சாலை அமையும்பட்சத்தில், அதற்குத் தேவையான உபகரணங்கள் தயாரித்து கொடுக்க 200க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உருவாகும்.

மேலும், நீண்ட நாட்களாக செயல்படாது இருக்கும் மதுரை, தூத்துக்குடி தொழில் பெருவழிச் சாலைத் திட்டமும் செயல்படத் துவங்கும். இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகளவில் கிடைக்கும்.

மேலும் ஓசூர், கோவை, சென்னை போன்ற நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தொழிற்பேட்டைகள் போல், தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய நகரமாக திகழும் மதுரையிலும் அமைக்கப்பட்டால் மதுரை மட்டுமில்லாது தென் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் தொழில்துறையில் ஏற்றம்பெற்று, தமிழ்நாட்டில் தொழில் வணிக வளர்ச்சி சமநிலையடைந்து மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஏற்றம் காணும்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஒலிம்பிக்கில் சிங்கபுலியாபட்டி சிங்கம்: குவியும் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details