மதுரை ரயில்வே கோட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகத் தென்னக ரயில்வே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மதுரை கோட்ட மேலாளர் வி.ஆர். லெனின், தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்.ஜே. பாஸ்கர் ஆகியோரின் மேற்பார்வையில் வைரஸ் தொற்றால் பாதித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர்களின் சிகிச்சைக்காக ஆங்காங்கு மருத்துவப் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தெரிவித்த கோட்ட மேலாளர், "அரசரடி இருப்புப்பாதை பணியாளர் பயிற்சி மையம், திருப்பரங்குன்றம் இயந்திரவியல் தொழிலாளர் பயிற்சி மையம், திண்டுக்கல், திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் ஓய்வு அறைகள், விருதுநகர் போக்குவரத்துத் தொழிலாளர் பயிற்சி மையம், மதுரை ரயில்வே மருத்துவமனை ஆகியவற்றில் இந்தச் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ரயில் பயணிகள், ரயில்வே ஊழியர்கள் ஆகியோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரயில் நிலையங்களில் தொடர்ந்து விழிப்புணர்வுத் தகவல்கள் ஒலிபரப்பப்பட்டுவருகின்றன. கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் அனைத்து ரயில் நிலையங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.