மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜுவை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பழங்காநத்தம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
'செல்லூர் ராஜூவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்'
அப்போது பேசிய அவர், "அமைச்சர் செல்லூர் ராஜூவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், பொதுமக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர். தற்போது அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மிகப் பலம் வாய்ந்தது. மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசின் மீது திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருகிறார்.
'உதயநிதி, இன்பநிதி என பல நிதிகளை வைத்துக்கொண்டு கொள்ளை'
முதலில் கருணாநிதி பிறகு ஸ்டாலின் தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் என அவரது குடும்பத்தை மட்டுமே திமுகவில் வளர்த்துவருகிறார். திமுக என்ற கட்சியை இவர் குடும்பம் வளர்க்கவில்லை. உதயநிதி, இன்பநிதி என பல நிதிகளை வைத்துக்கொண்டுதான் இந்த குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது போட்டியிடும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களில் 20 பேர் வாரிசுகள் ஆவர். எனது மகன் அரசியலுக்கு வரமாட்டார் என்று ஸ்டாலின் முன்னர் கூறினார். ஆனால் நிலைமை என்ன? சந்தர்ப்பவாத அரசியலை திமுக செய்துவருகிறது.
பழங்காநத்தம் பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை 'சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம்'
திமுகவில் தேர்தல் பரப்புரை செய்வதற்கு ஆட்கள் இல்லையா? திமுகவின் முக்கிய தலைவர்களை வைத்து பரப்புரை செய்யாமல் உதயநிதி ஸ்டாலினை வைத்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். திமுகவின் நிலைமை பரிதாபமாக உள்ளது. அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம். சாதாரண தொண்டன் கூட அமைச்சராகவோ எம்எல்ஏ ஆகவோ முடியும். ஏன் முதலமைச்சர் கூட ஆக முடியும். அதிமுகவில் உழைப்பவர்களுக்கு பதவிகள் தானாக தேடி வரும்.
'செருப்பை கூட உழைத்து வாங்கினால்தான் அருமை தெரியும்'
கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக. ஸ்டாலின் அணிந்திருக்கும் செருப்பின் தகுதியை விட எடப்பாடி பழனிசாமி தகுதி சிறியது என கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள்.அந்த செருப்பை கூட உழைத்து வாங்கினால்தான் அதன் அருமை தெரியும். திருட்டு ரயிலில் புறப்பட்டு வந்து சம்பாதித்தவர்களுக்கு எப்படி தெரியும்?
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து வந்த என்னை எவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார்கள். நல்லவர்களையும் கெட்டவர்களையும் மக்கள் பிரித்துப் பார்க்கவேண்டும். கெட்டவர்களாகிய திமுகவினரை ஒதுக்கவேண்டும். நல்லவர்களாகிய அதிமுகவினரை ஆதரிக்க வேண்டும். மேலும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கட்டாயம் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.