தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 9, 2020, 8:19 PM IST

ETV Bharat / city

ஆற்று தண்ணீரின் மாதிரிகளை ஆய்வு கூடத்திற்கு அனுப்பவேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

அமராவதி ஆற்றுப் பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் 5 பல்வேறு இடங்களில் நீரின் மாதிரிகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து சென்னை கிங்ஸ் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி அறிக்கை தாக்கல் செய்ய அவ்வாரியத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

amaravathi river water testing
amaravathi river water testing

மதுரை: அமராவதி ஆற்றில் நீரின் மாதிரிகளை எடுத்து, சென்னை கிங்ஸ் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தாமாக முன்வந்து தாக்கல் செய்த மனுவில், “கரூர் மாவட்டத்தில் சாயப் பட்டறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனால் அமராவதி ஆறு மாசடைகிறது. அமராவதி ஆறு சுமார் 282 கிலோமீட்டர் தூரம் திருப்பூர், கரூர் வழியாக செல்கிறது.

மேலும் கரூர், திருப்பூர் ஆகிய ஊர்களிலுள்ள நிறுவனங்கள் தங்களது நிறுவனக் கழிவுகளை ஆற்றுக்குள் வீசுகின்றனர். இதை அரசு அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சாய கழிவு நீரை அமராவதி ஆற்றில் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுகளை மாசு படுத்துவோர்களின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய, அரசிடம் உரிய விளக்கம் பெற்று சமர்ப்பிக்கப்படும் என அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் அமராவதி ஆற்றுப் பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் 5 பல்வேறு இடங்களில் நீரின் மாதிரிகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து சென்னை கிங்ஸ் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி அறிக்கை தாக்கல் செய்ய அவ்வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்து, வழக்கை டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details