ஈரோடு மாநகரில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபம், அரசு தலைமை மருத்துவமனை என இரண்டு இடத்தில், ஐந்து வகையான பரிசோதனை செய்வதற்கான கரோனா ஸ்கிரீனிங் மையம் அமைக்கப்பட்டது.
இங்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப வீடுகளிலோ, சிறப்புச் சிகிச்சை மையத்தில் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
ஈரோடு அரசு மருத்துவமனை ஸ்கிரீனிங் சென்டரில் தினமும் 50 பேருக்கும், மாநகராட்சி மண்டபத்தில் உள்ள ஸ்கிரீனிங் சென்டரில் தினமும் 50 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுவந்தது. இதில் மாநகராட்சி திருமண மண்டபத்தில் இடப் பற்றாக்குறை காரணமாகவும், அரசு தலைமை மருத்துவமனையில், மற்ற நோயாளிகளுடன் தொற்று பாதித்தவர்கள் கலந்துசெல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாலும், அந்த இரு இடங்களில் இருந்த ஸ்கிரீனிங் மையங்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு ஒரேஇடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள கலைமகள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு ஸ்கிரீனிங் மையங்களும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்கிரீனிங் மையம் செயல்பட தொடங்கியுள்ளது. இங்கு தினமும் 150 கரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்படும் என அலுவலர்கள் கூறினர்.