ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள திம்பம் மலைப்பாதையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இரவு நேர வாகன போக்குவரத்து தடை மற்றும் 16.2 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றிய லாரிகள் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் சத்தியமங்கலத்தில் லாரி தொழில் முடங்கியுள்ளது.
இதன் காரணமாக லாரி தொழிலை நம்பியுள்ள லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இரு மாநிலத்தை இணைக்கும் இச்சாலையில் திம்பம் மலைப்பாதை வழியாக 16.2 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றிய லாரிகள் அனுமதிக்கப்படாமல் உள்ளது.
இதனால் ஓசூர் வழியாக கனரக லாரிகளை இயக்கினால் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் இதற்கான வாடகையை நிறுவனங்கள் வழங்காததால் மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது என வேதனை தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நேற்று(ஏப்ரல் 27) சத்தியமங்கலத்தில் 500க்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் அரசு தலையிட்டு கனரக வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் செல்லும் வகையில் அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்போது காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கி உள்ளதாகத் தெரிவித்தனர்.
சத்தியமங்கலத்தில 500க்கும் மேற்பட்ட லாரிகள் வேலைநிறுத்தம்! இதையும் படிங்க:இயங்காத பிஎஸ்என்எல் தொலைபேசிக்கு இறுதி சடங்கு நடத்தி போராட்டம்