கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த பாலத்துறை முருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பெயின்டர் விஜய் (23). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சபீர் (24) என்பவரின் சேவல் ஒன்றைத் திருடி, விஜயிடம் கொடுத்து விற்றுத் தருமாறு கேட்டுள்ளார்.
விஜயும் சேவலை விற்று பணத்தைக் கொடுத்துள்ளார். இதனையறிந்த சபீர் தனது சேவலை கொடுக்குமாறு விஜயிடம் தகராறு செய்துள்ளார். விஜய் தனது பணத்தில் அதே சேவலை வாங்கி சபீரிடம் கொடுத்துள்ளார்.
பின்னர், சபீர் தன்னிடம் இருந்த நிறைய சேவல்களும் இதேபோன்று காணாமல்போனதாகவும் அவை அனைத்தையும் திருப்பித் தருமாறும் கூறி விஜயிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் தன் நண்பர் விஷ்ணு என்பவருடன் பாலத்துறை பகுதியில் அமைந்துள்ள பேக்கரியில் இருந்தபோது, சபீர் செல்போனில் அழைத்து சேவல் பிரச்சினை தொடர்பாக பேச வருமாறு விஜயை அழைத்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனி அருகே விஜய் சென்றுள்ளார்.