சென்னை: தவறாக வழிநடத்தப்பட்டுள்ள பஞ்சாப் மாநில விவசாயிகளைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு போன்ற புத்தகங்களை மேடையில் அறிமுகம் செய்தார்.
பின்னர் பேசிய மத்திய அமைச்சர், நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. தற்போது அங்கு பாஜகவின் கை மேலோங்கி, காங்கிரஸ் கட்சியின் கை கீழிறங்கிவிட்டது.
அதேபோல ராஜஸ்தான், ஹைதராபாத், கோவா, அருணாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
மேலும், பெரும்பாலான கட்சிகள் நாட்டில் குடும்பக் கட்சிகளாக உள்ளன. வரவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் குடும்ப அரசியல் இனிமேலும் எடுபடாது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க குறிப்பிடத்தக்க வெற்றியை நிச்சயம் ஈட்டும் என நம்பிக்கை உள்ளது. மேலும், மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் - திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாடு விவசாயிகளுக்கென எந்தவொரு நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் விவசாயிகளுக்காகவும், வேளாண் துறைக்காகவும் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள பாஜகவின் இந்த வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் மீதுள்ள நம்பகத்தன்மையும், அவரின் தலைமைத்துவமுமே காரணமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்று (டிச.25) பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள வேளாண்மை ஊக்க உதவித் திட்டத்தின் மூலம் 18 ஆயிரம் கோடி புதிய தவணைத் தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டு அதன் வாயிலாக 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் பணம் சென்று சேர்ந்துள்ளது.