சென்னை: தமிழக காவல்துறையில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய அரசு அதிகாரிகள் மீதான சொத்துக்குவிப்பு, ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் செயல்பட்டு வருகிறது. ஐஜி மேற்பார்வையில் இந்த பிரிவு செயல்பட்டு வருகிறது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவின் ஐஜியாக பவானீஸ்வரி செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் பவானீஸ்வரியை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் ஐஜியாக நியமித்து, உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக துரைக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.